திங்கள், 28 மே, 2012

நிலாச்சோறு இதழ் வெளியீட்டு விழா


நிலாச்சோறு இதழ் வெளியீட்டு விழா
வெளியிட்டவர் செஃப் ஜேகப் ச. அருணி

நிலாச்சோறு மாத இதழ் வெளியீட்டு விழாவும் அதனையொட்டிய பயிலரங்கமும் சிறப்பாக நடந்தேறியது. உணவுக்கலை வல்லுநர் ஜேகப் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட புகுமுக இதழாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பு செய்தார்.பயிலரங்கத்தில் குங்குமம் இதழாளர் கவிஞர் அய்யனார் ராஜன் நேர்முகம் குறித்தும் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், இதழாளர் முருகன் மந்திரம் அவர்கள் கட்டுரைகள், படப்பதிவு பற்றியும் பேரா.எழுதாளர்.ப. பானுமதி அவர்கள் சிறுகதை, நூல் அறிமுகம் பற்றியும் பேரா. கவிஞர். பூமாவதி அவர்கள் பன்முக திறனும் ஆளுமையும் என்பது குறித்தும் கருத்துகளை வழங்கினர்கள். நிலாச்சோறு இதழின் ஆசிரியர் மணி எழிலன் அவர்கள் வரவேற்புரையும் நன்றியுரையும் வழங்கினார். கவிராஜன் இலக்கிய மன்றத்தின் பொதுச்செயலாளர் துரை கோ. அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


திங்கள், 7 மே, 2012

கருப்பழகி “யவனப் பிரியா”

கொழு கொம்பு கண்டவிடத்து ஓடிப் படரும் கொடிமகள்தான் இந்த யவனப்பிரியா. இவளை அறியாதவர்கள் இருக்க முடியுமா?. நாம் அன்றாட வாழ்வில் ஒரு சிலரைப் பார்த்து இருப்போம். பழகி இருப்போம்; ஆனால் அவர்களின் பெயர் தெரியாமல் அல்லது அறியாமல் இருந்து விடுவது உண்டு. அதே போல் இந்தப் பசுங்கொடியாளையும் பார்த்தும் பயன் படுத்தியும் இருப்போம் என்று கூறுவது பொருந்தாது. கண்டிப்பாகப் பயன் படுத்தியுள்ளோம்; பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்று கூறினால அது பொருந்தும். ஆனால் அவளின் புனைப்பெயர் தெரியாமல் இருந்திருக்கிறோம் என்பதே உண்மை. இவள் இருந்தால் நீங்கள் நஞ்சைப் படைக்கும் உங்கள் பரம எதிரி வீட்டிலும் படைத்ததைச் சாப்பிட்டு பதறாமல் ஒரு ஏப்பம் விட்டு திரும்பலாம். இவளுக்குப் 'பைங்கறி' என்று ஒரு புனைப்பெயரும் உண்டு. அதுமட்டுமல்ல 'மிறியல்' என்னும் மற்றொரு புனை பெயரும் கொண்டவள். இவள் யார் என அறிய இந்தக் குறிப்புகள் போதும் என்று நினைக்கிறேன்..


இவளின் அங்க அடையாளம் வேறு கூற வேண்டுமா? சரி இவள் கட்டம் போட்டசேலை கட்டித் தன் உடல் மறைத்த அட்டக்கருப்பழகி.
நம் உடலைக் காப்பதில் கட்டிக் கரும்பழகி. சித்தன் அகம் எத்தன் அகம் எதுவானலும் சீர்மை சேர்க்கின்ற வண்ண மணியழகி. ஏடுபல எடுத்தியம்பும் எழில் வஞ்சிக் கொடியழகி. கடல் பறந்து மணம் பரப்பும் சின்னக்குயிலழகி. கோல மலையழகி கொட்டி வைத்த கருமை முத்தழகி. அந்தரத்தில் ஆடுகின்ற பச்சை மயிலழகி. இன்னுமா புரியவில்லை. மிளகுப்பெண்ணே அவள்.







"வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி?"

என்று குதம்பைச் சித்தர் பாடுவதைக்கேட்கும் போது பெருங்காயம் மிளகு சுக்கு இவையே நன்காயத்திற்கு தேவயானது என்பது புலப்படுகிறது. மருந்துப் பொருளானப் பைங்கறி, மிறியல், யவனப்பிரியா என்றெல்லாம் அழைக்கப்படும் மிளகு பற்றிய இலக்கியச் செய்திகள் ஏராளம்

மிளகுப்பெண்ணின் ஆட்சியில்தான் என்ன முரண் பாருங்கள்? இந்தக் கார அழகி படர விரும்பும் தோள்கள் இன்சுவை இளவரசர்களாம் முக்கனிகளில் ஒருவரான பலாக்கனியின் தோள்கள். இதோ பாருங்கள் சிறுபாணன் கூறுகிறான் சாட்சி.

“பைங்கறி நிவந்த பலவின் நீழல்” (சிறுபாணாற்றுப்படை,43)

இவனுக்கு அடுத்து மிளகாள் விரும்பித் தன் தலையைச் சாய்க்கும் தலைவன் தோள் சந்தனத்தான் தோள். ஆம் சந்தன மரம். சான்று இதோ,

“கறிவளர் சாந்தம்” (அகநானூறு,2)
மலைச்சாரலில் மணம் பரப்பும் இவளால் மலைச்சாரல் முழுதும் நறுமணமும் இலக்கியப் புகழ் மணமும் பெறுகிறது.

“கறி வளர் அடுக்கம்” (குறுந்தொகை,288)


கிழக்கிந்தியத் தீவுகளிலும் சேர நாட்டிலும் அதிகமாக வளம் சேர்த்த இந்த அழகிகளில் சேரனின் குலக்கொழுந்தே பெரும் புகழ பெற்றாள். சேர நாட்டிலிருந்து கால்நடை வீரர்களின் கையகப்பட்டும் பொது எருதுகளின் மீதேறியும் மிளகாள் காவிரிப்பூம்பட்டினம் வந்துள்ளாள் என்றும் சங்கம் சான்று பகர்கிறது. கால்நடையாக வந்தவளை,

“காலில் வந்த கருங்கறி மூடை” (பட்டினப்பாலை,186) 

என்று அதுமட்டுமல்ல சுங்க வரி செலுத்தும் வழக்கம், இன்று நாம் பைபாஸ் என்று கூறும் மாற்று வழிபோல சுங்கம் செலுத்திச் செல்லுகின்ற பெருவழியும் இருந்திருக்கிறது என்னும் பல செய்திகளும் கிடைக்கிறது.

“தடவிநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட 
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல் 
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து 
அணர்ச்செவி கழுதைக் சாத்தோடு வழங்கும் 
         உல்குடைப் பெருவழி” (பெருபாணாற்றுப்படை,77-800)

'உல்கு' என்பது சுங்க வரி என்று பொருள் படும்.

'கறி' 'மிறியல்' என்றெல்லாம் பல பெயர்களில் உலாவரும் இவளது இயற் பெயர் மிளகு. இவளை ஏன் யவனப்பிரியா என்று கூறுகிறோம். ஐரோப்பாவின் யவனர்கள் இவளை விரும்பி அதிக விலை கொடுத்து மணந்து (வாங்கி) சென்றதால் இவள் யவனப்பிரியா என்றே அழைக்கப்பட்டாள்.

மிளகாள் அறையிலும் ஆடி அரங்கத்திலும் ஆடியவள் ஆயிற்றே. கருப்புக்கு அழகு செய்து காத தூரத்தில் இருந்து பாரு என்பது தமிழ்ப் பழமொழி. அதுபோல கரிய நிறத்தாலோ, அவளது அரிய குணத்தாலோ, நரிய மணத்தாலோ கவரப்பட்ட மிளகுப்பெண் சங்க காலத்தில் பொன்னுக்கு இணையாக வைத்துப் போற்றப்பட்டுள்ளாள். அக்காலத்தில் தமிழ்நாட்டோடு யவனர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்' என அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது என்பது இலக்கியச் செய்தி. இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே மிகுதியாகத் தமிழகம் வந்துள்ளனர். பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிச் சென்றுள்ளனர். பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாக மேற்குக் கடற்கரைக்கு (கொங்கு நாடு) மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகிய பல பொருள்களுக்காக வந்த ரோமானியர் மிகவும் விரும்பி அதிக விலை கொடுத்து வாங்கிச்சென்றது மிளகைத்தான். குறிப்பாக முசிறி மிளகைக் கொடுத்து பொன்னைப் பெற்றுள்ளது. இக்கருத்தை,

“கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க 
யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளங்கெழு முசிறி” (அகநானூறு,149)

என்று எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பெருமையாய்க் கூறுகிறார்.

“மன்கைகுவைஇய கறிமூடையால் 
கலிச்சும்மைய கரைகலக் குறுந்து கலந்தந்த பொற்பரிசம் 
கழித்தோணியால் கரைசேர்க்குறுந்து” (புறநானூறு,343)


செக்கச் சிவந்த சிவப்பழகியாம் மிளகாயைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அட்டக் கருப்பழகியாம் இவளைப் பயன்படுத்துவதே உடல் நாட்டிற்கு உகந்த ஆட்சி என்று பலரும் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அது போலவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடி கட்டிப் பறக்கும் இவளைச் சமையலுக்கு அதிகமாகப் பயன்படுத்தியும் வருகிறோம். அக்காலத்திலும் மிளகைச் சமையலுக்குப் பயன்படுத்தி உள்ளமையை,
”துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை” (அகநானூறு)


“பசுங்காய்ப் போழொடு கறிகலந்து 
கஞ்சக நறுமுறி யளையீ” (பெருபாணாற்றுப்படை)
என்னும் சங்கப் பாடல்கள் சான்று கூறுகின்றன.

பைப்ராஸே (PIPERACEAE) என்னும் குலத்தில் உதித்த குலக்கொழுந்தாகிய இவளின் குடும்பப் பெயர் பைபர் நிக்ரம் (PIPER NIGRUM). இந்தக் குடும்பத்து வாரிசுகள் மிளகு, வால்மிளகு என்னும் இருவர். மலையாளி, குறுமிளகு, கோளகம் என்றெல்லாம் பட்டப்பெயர்களை இட்டு இவர்களை அழைப்பது வழக்கம்.

பத்து அல்லது பனிரெண்டு அடிகள் உயரமாக வளரக்கூடிய இவளது இலைகள் வெற்றிலை இலைகள் போல அகலமாக இருக்கும். இனி இவளின் ஆற்றலைப் பார்ப்போமா?

மனிதன் சுறுசுறுப்பாக இயங்க உதவும் அவன் உடலின் முக்கியமான பகுதி நரம்பு மண்டலமே. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால்தான் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராக இருக்கும்.

கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் ஏராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது.

மனிதன் உண்ணும் எவ்வளவு கடினமான உணவாக இருந்தாலும் அதைச் செரிக்க வைப்பதில் மிளகுக்கு நிகர் மிளகே..

உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லைகள் முதலியவை நீங்க மிளகை நன்கு பொடி செய்து ஐம்பது கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் அரை லிட்டர் சேர்த்து அரை மணி நேரம் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொண்டு, மூன்று வேளை அருந்தி வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வில்வ இலையைக் காய வைத்து பொடியாக்கிக் கொண்டு மிளகுத்தூளுடன் சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

சாதாரண சளி, காய்ச்சல், தொண்டை வலி எல்லாவற்றிற்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்த சளி, காய்ச்சல், தொண்டை வலி எல்லாம் சிட்டாய்ப் பறந்து போகும். மிளகைச் சுட்டு அதன் புகையை மூக்கின் வழி இழுத்தால் சளித்தொல்லைக்கு இதமும் நிவாரணமும் உடனே கிட்டும்.

வால் மிளகுத்தூளுடன் சிறிதளவு சிறுகுறிஞ்சான் இலைச் சூரணத்தைச் சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட நீரிழிவு நோயும் குணமாகும்.

சலி, காய்ச்சலைத் தொடர்ந்து பாகுபாடின்றி எல்லோரையும் துன்பத்துள் ஆழ்த்தும் ஒரு நோய் தலைவலி. ஒற்றை, இரட்டை, பின்மண்டை வலி என்று எந்தத் தலைவலியாக இருந்தாலும் மிளகை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி போயே போகும்.

பத்து மிளகுடன் ஒரு கைப்பிடி அறுகம் புல்லைச் சேர்த்து மையாக அரைத்து அதைக் கசாயமாகக் காய்ச்சி அருந்தினால் எப்படிப்பட்ட விஷக்கடியும் வந்த வழிச் சென்று விடும்.

உடலில் எங்கேனும் சுளுக்கு ஏற்பட்டால் சிறிது மிளகுத்தூளைச் சிறிது நல்லெண்ணெயில் கலந்து பற்று போட்டால் சுளுக்கு வழுக்கென்று ஓடிவிடும்.
பற்சொத்தை, பல்வலி ஆகியவற்றுக்கு மிளகுத்தூளையும் உப்பையும் கலந்து தினமும் பல் துலக்கி வர பற்சொத்தை காணாமல் போய்விடும்.

மயிர்ப் புழுவெட்டு உள்ளவர்கள் மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர அடர்த்தியாக முடி வளர்ந்து விடும்

இது மிகவும் முக்கியமானது. மகப்பேறு இல்லாதவர்கள் மிளகுடன் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்துப் பாலில் கலந்து குடித்து வர, மழலை வீட்டில் அடியெடுத்தும் வைக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மிளகை அன்றாடம் சமையலில் பயன் படுத்துவது தமிழர்களாகிய நம் கடமை.

மிளகைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். ஆம் நாள்தோறும் உணவில் மிளகைச் சேர்த்துக் கொண்டால் நாள்தோறும் உடலில் அழகு கூடிக் கொண்டே வரும். எப்படி என்று கேட்கிறீர்களா? தினம் தினம் மிளகு ரசம்.. அருந்தும் உடல்களில் கொஞ்சும் தினம் தினம் அழகு ரசம்.

சனி, 31 மார்ச், 2012

வரங்களே சாபங்களாக...



http://desmond.imageshack.us/Himg26/scaled.php?server=26&filename=kuppai.png&res=medium

வேண்டாத போது
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது


குப்பைத்தொட்டியில்
வரங்கள்


குழந்தைகளாக!!!

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை




புதன், 28 மார்ச், 2012

அடை காக்கிறேன் ஏக்கச் சூட்டில்!



http://babywallpapers.net/images/wallpapers/Cute%20Baby%20In%20Flower-631200.jpeg

தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை

முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ  மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
என் நெஞ்சின்
ஏக்கச் சூட்டில்!
http://1.bp.blogspot.com/_NjdBzKI5nYs/ScxQcH2ebDI/AAAAAAAABrg/QySO2_12n28/s400/sweet+baby+kid+wallpaper+photo+image+high+resolution+printable.jpg

திங்கள், 26 மார்ச், 2012

அம்பேத்கரின் சேரியமும் நீரியமும்


நாடு சுதந்திரம் அடைந்தபின் ஒருநாள் நள்ளிரவு அண்ணல் அப்பேத்கரைச் சந்தித்த வெளிநாட்டுச் செய்தியாளர் அந்த நள்ளிரவு நேரத்திலும் படித்துக்கொண்டிருந்த அம்பேத்கர் அவர்களிடம், ”காந்தி, நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம். அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று வியந்து கேட்டார்.

“அவர்கள் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது
ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள்.
என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது
எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்”

என்று பதில் கூறினார் அம்பேத்கர். விழியிருந்தும் ஒளியிழந்து, உயிர் இருந்தும் உணர்விழந்து, மதியிருந்தும் மனிதராகக் கூட மதிக்கப் படாத ஏற்றத் தாழ்வு மிகுந்த சமுதாயத்தில், ஒவ்வொரு விடியலிலும் கையில் கோணியுடன் நாணி நின்ற அந்தச் சிறுவன் தாழ்த்தப்பட்டோர் உயர உயர ஏறிப்போக ஏணியாக மாறுவதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டதில் பெருவியப்பு ஏதுமில்லை. அதனால்தான் ஒரு மேல்தட்டு மனிதனாலும் எட்ட இயலாத அந்த உயரத்தை அக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் எனக் கருதப்பட்ட கீழ்த்தட்டு இனத்து அம்பேத்கர் அவர்களால் எட்ட இயன்றது. இது எவரும் கற்பனை கூட செய்திருக்க முடியாத ஒரு ஏற்றம்.

மனிதனை மனிதன் மதிக்கின்ற உறுதியான பண்பாடு அற்ற காலத்தில் அதாவது தன் எச்சிலைக்கூடத் வெளியில் துப்புவதற்கு அனுமதியற்று எச்சில் துப்பும் ஒரு கலயத்தைத் தன் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு சென்றுள்ளனர். தெருக்களில் இவர்கள் நடந்தால் பாதை தீட்டாகிவிடும் என்பதால் துடைப்பத்தைத் தம் இடுப்பில் கட்டிக்கொண்டு சென்றுள்ளனர். உயர் சாதிக்காரர்களுக்கு இணையாக முழங்காலுக்குக் கீழ் வேட்டிக் கட்ட அனுமதியற்ற ஆண்களும் மார்பை மறைக்கும் மேலாடையை(ரவிக்கையை) அணிய அனுமதியற்ற பெண்களுமாக அடக்குமுறை நிறைந்த இருட்டுலகில் வாழ்ந்து வந்த இனத்தில் ஓர் ஒளிவிளக்குத் தோன்றி தம் இனத்தின் பண்பாட்டை அடியோடு மாற்றியமைக்கப் போராடியது. அப்போராட்டத்தின் முடிவு வெற்றியா என்பதே இன்றைய கேள்வி?

ஆடு மாடு எங்கு வேண்டுமானாலும் திரியலாம். ஆனால் தலித் என்று அழைக்கப்பெற்ற மனிதனின் மூச்சுக்காற்றும் தீட்டாகப் போனது. மகாராட்டிரத்தில் காற்றுத் தீட்டாகிவிடும் என்று காலை ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று ஒரு சட்டமும் இருந்த தகவல் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல இவர்கள் வீதியில் நடமாடினால் ஒரு மணியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அந்த ஒலி கேட்டவுடன் பிற இனத்தவர்கள் எதிரில் வராமல் ஒதுங்கிச் செல்வார்களாம். அந்த மகாராட்டிரத்தில் மகார் என்ற இனத்தில் பிறந்த அம்பேத்கர் பட்ட அவமானங்கள் அவர் தலித்திய இயக்கங்களைத் தொடங்கவும் தொடரவும் காரணமாக அமைந்தன.

அம்பேத்கர் பரோடா அரசில் உயர் பதவி வகித்த போதிலும் இவருக்குக் கீழே பணிபுரிந்த உயர்சாதியினர் இவரை நடத்திய விதம் இங்கே குறிப்பிடத்தக்கது. எல்லோரும் பணியாற்றும் அறையில் அமர்ந்து பணியாற்றவும் தண்ணீர் அருந்தவும் இவருக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. இந்நிலை இவரைச் சாதியத்தை ஒழிக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் எழுச்சியைத் தோற்றுவித்தது. மகார் இன மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த சாதிய அமைப்பைக் கடுமையாகச் சாடும் கபீர்தாசருடைய பக்தி இயக்கமும் பூக்கள் கட்டும் சாதியில் (மாலி) பிறந்த பூலே உருவாக்கிய சத்திய சோதக் சமாஜம் என்னும் இயக்கமும் அதற்கு உதவின என்று கூறலாம்.

இப்பின்னணியில் அம்பேத்கரின் சாதிய ஒழிப்புப் போராட்டம் குறித்த கருத்துகளைப் பல நூல்களில் கண்டாலும் ’இந்தியாவில் சாதிகள்’, ‘சாதி ஒழிப்பு’, ‘சூத்திரர் யார்’, ‘தீண்டத்தகார்’ ஆகிய அவரது நான்கு படைப்புகளில் அவரது அகமனம் ஆற்றிய போராட்டங்கள், அவர் பட்ட வேதனைகள், அதன் காரணமாக அவரது புரிதல்கள், அதனால் மக்களுக்கு அவர் கூறும் அறிவுரைகள் என பெரியதொரு விழிப்புணர்வு எழுத்துப் பிரச்சாரத்தைக் காணலாம்.

வருணாசிரம முறையில் தீண்டத்தகாதவர் உருவாக்கப் படவில்லை. அங்கு அசுத்தமானவர்கள், அடிமைகள் என்ற நிலையே காணப்பட்டது. வருண நிலைக்கு உட்பட்டவர் (வர்ணஸ்தர்) வர்ண நிலைக்கு உட்படாதவர் (அவர்ணஸ்தர்) எனப்பட்டனர். ஒரு குழுவின் குருதிப் புனிதத்தைப் பாதுகாக்க தேவையெனக்கருதிய அகமணமுறை புரோகிதர்களிடம் தோன்றி பின்னர் மெல்ல மெல்ல எல்லாப் பிரிவினரிடமும் பரவியது என்கிறார் அம்பேத்கர்.

செத்த மாட்டின் இறைச்சியை உண்பவர் தீண்டத் தகாதவர் ஆயினர். இவர்கள் தீண்டத் தகாதவர் ஆனதற்கு இதுவே முதன்மைக் காரணம் என்று டாக்டர் அம்பேத்கர் நினைக்கிறார் தலித் என்னும் சொல் தாழ்த்தப்பட்டோர் என்று கருதப் பெற்ற இனத்தின் அடையாளமாகக் கருதப்பெற்றது. அச்சொல் அவ்வின மக்களின் வேதனைக் குறியீடாகவே இன்றும் ஒலிக்கப் படுகிறது. இன்றும் தலித் என்பவர் சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் என்னும் எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்டோராகவே இருந்து வருகின்றனர்.

சாதிய ஒழிப்பு முறைகளாக அம்பேத்கர் முன்வைத்தவைகளில் முக்கியமானவை அரசதிகாரத்தில் பங்கு, கலப்பு மணம், சாதியத்துக்குப் புனிதம் கற்பிக்கும் இந்து சாத்திரங்களைத் தகர்த்தல் ஆகியவை. இட ஒதுக்கீடே சாதியத்தை அழிக்கும் வலிமையான ஆயுதம் என நம்பி அதனைச் சட்டமாக்குவதில் தீவரமாக உழைத்தார். நிலமற்ற கூலி விவசாயிகள் பாரம்பரியமாக அடிமைகளாக இருப்பதால், அவர்களுக்கு சிறு நிலங்களைப் பிரித்துக் கொடுத்துப் பயனில்லை என்று எண்ணிய அம்பேத்கர் கூட்டுப் பண்ணை முறையே சிறந்தது என்னும் கருத்தையும் முன்மொழிந்தார். குத்தகை விவசாயிகளின் அடிமைத்தன ஒழிப்பு மசோதாவை முதலில் அறிமுகப் படுத்திய பெருமைக்குரிய சட்ட மனற உறுப்பினர் அம்பேத்கர். பம்பாய் பாரம்பரியப் பணிகள் சட்டம் (1928) குறுநில விவசாயிகள் சிவாரணச்சட்டம் (1927), கோத்தி முறை ஒழிப்புச் சட்டம், வாட்டள் முறை ஒழிப்பு, ஜூடி முறை ஒழிப்பு ஆகியவற்றுக்கான மசோதாக்களை இவரது கரங்களே முன்மொழிந்தன. தகுதியுடைய இந்துக்கள் எவரும் புரோகிதராக இருக்கலாம் என்னும் கருத்தையும் முன்வைத்தார்.

ஊர்ப்புறங்களில் இன்னும் தீண்டாமை முற்றிலும் விலகவில்லை. இன்னும் தலித் இனப்பெண்களை வன்புணர்தல் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

தலித் என்பவர்கள் தமக்கென ஒரு பண்பாடு, தமக்கென ஒரு மொழி தமக்கென ஒரு பாட்டு, தமக்கென ஒரு இசைக்கருவி என்று தம்மை அடையாளப்படுத்திய காலத்தில் இவற்றில் இருந்து வெளியில் வரவேண்டும் என்று குரல் கொடுத்தார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் இன்றும் சிலர் கொச்சை மொழியே தம் அடையாளம் என்றும் கொச்சையாக எழுதுவதும் பேசுவதுமே தம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று கட்டியம் கட்டிக் கூறுகின்றனர்.

‘வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெறுக்கும்
கவிப்பெறுக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்று பதவி கொள்வார்”

என்று பாரதி கூறுவது போலத் தம் இன மக்கள் கல்வி கற்றால்தான் இவ்விழிநிலையில் இருந்து மீளலாம் என்று உறுதியாக நம்பி அதற்கு ஆவன செய்தவர் அம்பேத்கர்.

ஒரு நாட்டின் வளத்திற்கு மண்வளம் மனித வளம் இரண்டை விடவும் நீர் வளமே மிக முக்கியமானது. நீரின்றி அமையாது உலகு. எல்லையை இழந்து பல தொல்லைகளை அடைந்து இன்று முல்லையையும் இழந்த நிலையில் டாக்டர் அம்பேத்கரின் நீரியம் பற்றி பேசுவதும் நம் கடமையாகிறது.

இயற்கையும் மைய அரசைப் போலவே நீரைத் தருவதில் ஒருபுறம் கஞ்சத்தனமும் ஒரு புறம் தாராளத்தனமும் காட்டுகின்றது என்பது மட்டுமல்ல. தருகின்ற சிறிதளவு நீரையுமே உரிய நேரத்தில் தருவதில்லை. ஆனாலும் நாம் இயற்கையின் மீது பழி சுமத்துவதை விடுத்து அதனைச் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே அன்று, இன்று மட்டுமன்று என்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இந்திய நாட்டின் மொத்த நீர்வளம் 65,986 டி.எம்.சி. மேற்சொன்ன விவசாயம், வீட்டுப் பயன்பாடு, தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகிய அனைத்திற்குமாக பயன்படுத்தும் அளவு 21,356 டி.எம்.சி. தான். இது மொத்த நீர்வளத்தில் சுமார் 31 விழுக்காடுதான். மீதமுள்ள 69 விழுக்காடு நீர் கடலில் கலந்து வீணாகிறது. இதனால் பல மாநிலங்களில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. சில இடங்களில் வெள்ளத்தால் வளம் வீணாகிறது

நீர்வளம், பாசனவசதி அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்குகிறது. குறைந்த செலவில் போக்கு வரத்திற்குப் பயன்படுகிறது. தொழில் மயமாக நாடு மாறுவதற்குத் தேவையான மின்சார உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு காரணமானது நீர்வளம். ஆகவே இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று அறைகூவல் எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது. இந்த ஒலியின் ஆரம்பம் இந்த ஒலியில் துவக்கம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே டாக்டர் அம்பேத்கர் திருவாய் மலர்ந்து பிறந்தது: ஒலித்தது. பறை சாற்றியது என்பதே உண்மை.

அன்றைய பிரித்தானிய அரசு 1919 ல் செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்து அதில், நதிகள் அவ்வவ் மாநிலங்களின் சொத்து என்று சொன்னது.

1935ல் விவசாயமும் நதிநீர்த்தேக்குதலும் மாநில அரசுகளின் உரிமை அதில் மைய அரசு தலையிடாது என்று சட்டம் இயற்றியது.

இவ்விரு சட்டங்களையும் 1942ல் தொழிளாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர் கடுமையாகச் சாடினார். எப்படி இந்தியாவை இணைக்கின்ற தொடர் வண்டி போக்குவரத்து மைய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதோ அதே போல பல்வேறு மாநிலங்களைக் கடந்து செல்லும் நதிகளும் மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேஎண்டும் என்றார். இந்தியாவில் காணப்படும் ஒரு பகுதியில் பெய்யும் அதிக மழையும் ஒரு பகுதியின் வறட்சியையும் சமநிலைப் படுத்த நீர்த்தேக்கங்கள் வேண்டும் என்ற கருத்தை அன்றே பறைசாற்றினார். அத்துடன் நிற்காது 1945 ஆகஸ்ட் 23 ல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் தாமோதர் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்ட வரைவினை அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக 1945ல் கட்டாக்கில் ஒரிசாவில் பாயும் ஆறுகளின் வளர்ச்சிக்கான பல்நோக்குத் திட்ட மாநாட்டில் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவரது சிந்தனை செயல் வடிவம் பெற்றது. இன்றய ஒரிஸா மாநிலத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது எனில் அது மிகையன்று. இந்தத் திட்டத்தை அடியொற்றியதே நேருவின் புகழ் வாய்ந்த நதிநீர்த்திட்டங்களான பக்ராநங்கல் திட்டம், சோனே திட்டம், மகாநதி திட்டம் ஆகியவை.

நதிநீர் தேசிய உரிமை. நதிநீர் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள இந்திய மாநிலங்கள் அனைத்தும் இணைந்து கூட்டுத் திட்டங்கள் வகுக்க வேண்டும். அந்தத் திட்டங்கள் மாநிலங்களைத் தாண்டி பெரும்பான்மை மக்களுக்குப் பயன் தரும் பொதுத் திட்டமாக அமைய வேண்டும் என்று அன்று அழுத்தம் திருத்தமாக வாதாடினார். இன்று வருமா நாளை வருமா என்று எதிர்ப்பார்த்து வரும் நதிநீரைப் போலவே நதிநீர் தேசியமயமாக்கல் திட்டமும் தென் மாநில மக்களைத் தொடர்ந்து ஏங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அவர் அன்று தொடங்கி வைத்த இந்த உரிமைப்போராட்டங்களாகிய சேரியமும் நீரியமும் இன்றும் முழு வெற்றியைக் காணவில்லை என்பது இந்தியர்களின் துர்ப்பாக்கிய நிலை என்றே கூறலாம்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

ஒரு தாயின் ஜனனம்


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP
உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை


உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்


ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று


உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.


என்னை 
தாயாகத் தத்தெடுத்த 
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!



திங்கள், 27 பிப்ரவரி, 2012

சுடரொளித் திருநாள்... மாநிலக்கல்லூரியில்... தொல். திருமா அவர்களுடன் ஒர் நாள்



 




 





மாநிலக்கல்லூரியில் இன்று ஆதிராவின் வாய் உதிர்த்தது. பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களைப் பற்றி...

வேழத்தின் முழக்கம் போல் வெண்டமிழை முழக்குகின்ற
விசைத்தமிழன் - திருமாவளவன்
ஈழத்தின் முழவோசை இடி இடிக்கும் இவன்பேச்சில்
பார்வை வீச்சில் ஏவுகணை இரண்டோடும்
இனப்பகையை தூளாக்கும் -இவன்

மூச்சுச் சூட்டில் மொழிப்பகைக்கு
வேல் வடிக்கும் சிறுத்தையெல்லாம் சிலிர்த்தெழுந்து இவன்
காலத்தால் அழியாத கனிந்த தமிழ் போர்மறவன்

மாநிலக்க்ல்லூரியின் முன்னாள் மாணவர்
பாராளுமன்றத்தின் இந்நாள் உறுப்பினர்
இனத்தமிழன் இதயத்தில் எந்நாளும் 
 
தனித்தமிழனாய் வீற்றிருக்கும்  
நற்குணத் தமிழன் திருமாவளவன்..


இயக்குனர் மணிவண்ணைப் பற்றி..
கருஞ்சிறுத்தைக் கூட்டம் இவன் கன்னத்தாடி
கண்ணிரண்டும் கன்னி வெடி
என்ன முரண்? மணிவண்ணன் கருத்த மெய்யில் 
கலங்கமில்லா வெள்ளை உள்ளம்
வெள்ளித்திரை சிரிப்புக்கு பல்லே இவன் தான்
நாவில் சொல்லணையைக் க்ட்டி வைத்து 
நல்ல தமிழ் சிந்தனையை இயக்குகின்ற இயக்குநர்.

கவிஞர் அறிவுமதியை..
தமிழ் உணர்வுத் தணல்காடு - இவன்
தமிழர்க்காய் கட்டி வைத்த இனமானத் தேன்கூடு
சிமிழ் தூக்கிப் பாய்கின்ற சீற்றக் காளை
குமிழ் ஊற்றாய் சொல்லூறும் குமுறும் ஆறு
இனப்பகையை இடுப்பொடிக்கும் இவன்சொல் ஈட்டி

சனி, 18 பிப்ரவரி, 2012

தேனினும் இனிய தம்பி உதயாவுக்கு....

தேனினும் இனிய தம்பி உதயாவுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

தேனாக இருந்தாலும் சுவைப்பதற்கு
திகட்டி விடும் சிலநாளில்
தினந்தினந்தான் கேட்டாலும் தித்திக்கும்
திகட்டாத குரலினிமை
கானெழுந்த சந்தனத்து நன்மணமாய்
கனித்தமிழில் மணக்கின்றாய்
ஊனெழுந்து உதிர்க்கின்ற மொழியாலே
உலகத்தை இழுக்கின்றாய்

இனிமை பூத்த நிலவொளியில்
இரவு பூக்கும் இசைமலர் நீ
இரவெல்லாம் காய்ச்சி வைத்த
இளைய தமிழ் அமுதம்நீ
மழைத்துளிகள் ஒன்றாகிக்
கொட்டுகின்ற பாட்டருவிநீ
மனமெல்லாம் அன்பாலே
நிறைந்து விட்ட தேனருவிநீ

வான்புகழும் வள்ளுவனின் திருக்குறள் நீ
வற்றாத கம்பன்வாய் கவிநயம் நீ
தேனொழுகும் திரைத்தமிழின் திருவாசகம் நீ
தெவிட்டாத அருட்பாவின் அகவல் நீ
ஊற்றாக உள்ளமெல்லாம் உவகை பொங்க
உலகம் வாழ் நாளெல்லாம் நிலைத்து நின்று
போற்றுகின்ற புத்துலகச் சிற்பியாகி
பொன்னெழுத்தால் புதுபுகழைப் பொறித்து வாழ்க!

திங்கள், 26 டிசம்பர், 2011

அடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSxKH2kfAAWa45xoN48BCaQLQSBYkxgI7MlmClXtAAJ9cxaePEyZ1lH0yZhsw

தொலைக்காட்சியில் திடீரென இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சித் தொகுப்பு. ஏ.டி.எம்.களில் காவலர்கள் என்ன செய்கிறார்கள் என்று. நள்ளிரவு வந்த ரோந்தில் ஒரு ஏ.டி.எம் மையத்திலும் காவலர்கள் காவல் பணியில் இல்லை. ஒருவர் தம் அடிக்கச் சென்று, ஒருவர் தண்ணீர் அடித்து விட்டு, ஒருவர் எங்கோ சென்று, ஒருவர் பக்கத்தில் உள்ள கடையில் உறக்கம், ஒருவர் அங்கேயே உறக்கம் அவரைக் கிட்டத்தட்ட மிதித்துச் சென்றதும் தெரியாமல் இவ்வாறு சென்னையின் சற்றேறக்குறைய இருபது முப்பது முக்கிய பகுதிகளில் உள்ள ஏ.டிஎம் மையங்களின் காட்சிகளைக் கண்ணாறக் கண்டு களித்தோம்.  அதை மறந்திருக்க மாட்டோம்.

இந்தச் சோதனைக்கு என்ன காரணம் என்றால் தற்போது நவீனத் திருட்டுகளில் ஏடிஎம் திருட்டு முதலிடம் பிடித்துள்ளது. நாம் வங்கிக்குச் சென்று, விண்ணப்பப் படிவம் பெற்று அதைத் தப்பும் தவறுமாக நிரப்பி அதில் எழுத்து கண்ணுக்கே தெரியாத அளவுக்குச் சிறியதாக இருப்பதால் குத்து மதிப்பாகப் பூர்த்தி செய்து கொடுத்து, அதைப் பார்த்ததும் வங்கி அலுவலர் கடுப்புடன்  “என்ன இப்படி எழுதியிருக்கிறீர்கள் வேறு படிவத்தில் எழுதித் தாருங்கள் என்று முறைக்க, இந்த ஸ்லிப்பைப் பிரிண்ட் செய்தவன் என் கையில் கிடைத்தால் அவன் செத்தான் என்று மனதிற்குள் திட்டிகொண்டே பக்கத்தில் இருக்கும் யாரிடமாவது கெஞ்சி மீண்டும் பூர்த்தி செய்து, வங்கியில் இருந்து நம் பணத்தை எடுக்க நாம் அவதிப்பட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போது ஏதோ கார்டைச் செறுகினோம் பின் நம்பரை அழுத்தினோம், பணத்தை எடுத்தோம், இது எவ்வளவு சுலபமாக உள்ளது என்று எண்ணி வியந்து கொண்டிருக்கையில் நம் கணக்கில் இருந்து நம் பின் நம்பரை அழுத்திப் நம் பணத்தைத் திருடுவது கொள்ளையர்களுக்கும் மிகச் சுலபமாக இருக்கிறதாம், இது மட்டுமல்ல ஏடிஎம் மெஷினையே திருடுவது வீட்டின் பூட்டை உடைத்துத் திருடுவது, வங்கிக் கொள்ளை முதலிய எல்லாவற்றையும் விட எளிமையாக இருக்கிறது என்கின்றனர் கொள்ளையர்கள் தங்கள் நடவடிக்கை மூலம். ஆதாரம் பணத்தைத் பரிகொடுத்து நொந்தவர்கள் தந்த அறிக்கையே.

இந்த ஏ.டி.எம். கொள்ளையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு ஏ.டி.எம். இயந்திரம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

ஏ.டி.எம். இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரன். ஒருமுறை அவசரத்தேவைக்காகப் பணம் எடுக்கத் தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்குப் போயிருந்தார் ஷெப்பர்ட். அன்று வங்கி விடுமுறையாக இருந்தது. இதனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. உடனே தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்கத் திட்டமிட்டார். தானியங்கி சாக்லேட் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உருவாக்கினாராம். ஷெப்பர்ட் கண்டுபிடித்த முதலாவது தானியங்கி (ஏ.டி.எம்) இயந்திரம், லண்டன் புறநகர் பகுதியில், பர்க்லேஸ் வங்கிகிளையில் 1967 ம் ஆண்டு ஜூன் 27 ம் தேதி நிறுவப்பட்டது.

இதுதான் உலகின் முதலாவது ஏடிஎம் இயந்திரமாகும். இதுகுறித்து 2007ல் பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், எனது பணத்தையே என்னால் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தானியங்கி சாக்லேட் தரும் இயந்திரத்தைப் பார்த்தேன். அதை அடிப்படையாக வைத்து இந்த ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கினேன் என்றாராம்.

அப்போது ஆறு இலக்க குறியெண்ணை உருவாக்கிய ஷெப்பர்ட் தன் மனைவி நான்கு இலக்க எண்ணைத்தான் நினைவில் வைத்துக்கொள்ள இயலும் என்று கூறியதன் அடிப்படையில் நான்கு இலக்க எண்ணை உருவாக்கினாராம்.

நம் ஏ.டி.எம் அட்டையின் அடையாளமாகப் பதினாறு இலக்க எண்கள் அமைந்திருக்கும். இதில் முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியின் அட்டை என்பதையும் அடுத்த ஒன்பது எண்கள் எந்ததெந்த சேவைக்குரியது அந்த அட்டை என்பதை முடிவு செய்யும் எண்களாகவும் கடைசி ஒரு எண் அட்டை பயன்படுத்தக் கூடியதா பயன்படுத்த இயலாததா என்பதைக் குறிக்கும். எகார்டு ஐந்து என்னும் இலக்கத்திலும் டெபிட் கார்டு நான்கு என்னும் இலக்கத்திலும் தொடங்கும்.


இப்போது நம் கணக்குள்ள வங்கி தவிர மற்ற எந்த வங்கி ஏ.டி.எம்.லும் நாம் பணம் பெறலாம். இதற்குச் செட்டில்மெண்ட் என்று பெயர். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் எந்த வங்கிக்குப் பணம் சேர வேண்டுமோ அந்த வங்கியின் கணக்கில் பணம் சேர்ந்து விடும். அந்தந்த வங்கிக்குச் சேர வேண்டிய கணக்கைச் சரி பார்த்துச் சேர்ப்பது சுவிட்ச் எனப்படும் ஒரு மென்பொருளின் வேலை. இதனால் இந்த மென்பொருள் நிறுவனத்திற்கு என்ன பயன் என்றால் நாம் ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன் படுத்தும்  ஒவ்வொரு முறைக்கும் சுவிட்ச் என்னும் மென்பொருளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகை இம்மென்பொருள் நிறுவனத்திற்கு  வங்கிகளால் கொடுக்கப் படுகிறது.


சென்னையில் உள்ள கனரா வங்கி,  எச்.டி.எஃப்.சி வங்கி,  ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. போன்ற சில வங்கிகளின் ஏ.டி.எம். மெஷின்களில் கடந்த சில நாட்களில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்குப் பயங்கர அதிர்ச்சி! அவர்களின் வங்கிக் கணக்குகளில் கொத்துக் கொத்தாகப் பணம் காணாமல் போயிருப் பதைப் பார்த்துத் திடுக்கிட்டனர். உடனே பதறியபடி வங்கிகளுக்கு ஓடினர். வங்கியின் வழிகாட்டுதலை அடுத்து போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் படையெடுத்தனர்.

சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இருந்து மட்டும் கொள்ளை போனதாகச் செப்டம்பர் மாதம் சுமார் 65 புகார்களும் அக்டோபர் மாதம் சுமார் அறுபது புகார்களும் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று மாதங்களி சுமார் 150 க்கும் மேற்பட்ட புகார்கள், கொள்ளை போன தொகை சுமார் 2 கோடியைத் தாண்டியுள்ளதாம்.

சரி எப்படி கொள்ளை போகிறது? என்ன நுனுக்கத்தில் இக்கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன என்று நாம் அறிந்து கொள்ள வெண்டாமா?

இதற்கெல்லாம் சூத்திரதாரி சீனாவே. சீனாவில் தயாராகும் ஸ்கிம்மர் என்னும் கருவி ஒன்றே இப்பெரிய திருட்டுக்கு உதவியாக உள்ளது. இதன் விலை 25 ஆயிரம் ரூபாய். இது ஒரு ஸ்டிக்கர் போன்ற கருவி. யாருக்கும் தெரியாமல் இதனை ஏ.டி.எம் மெஷினில் உள்ள கார்டு ரீடரில் (Card Reader) அதாவது நாம் கார்டை நுழைக்கும் இடத்தில் பொருத்தி விடுகிறார்கள். வாடிக்கையாளர் பணத்தி எடுக்க கார்டை நுழைக்கும்போது அக்கார்டு ஸ்கிம்மரைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டும். அப்போது அந்த ஸ்கிம்மரில் வாடிக்கயாளரின் கார்டில் உள்ள பதிவு எண் பின் எண் எல்லாம் அதில் பதிவாகிவிடும். அதனை எடுத்து சி.டி ரைடர் போன்ற மெஷின் மூலம் ஏ.டி.எம். கார்டு குறித்த எல்லாத் தகவல்களையும் பதிவு செய்து கொள்வார்களாம். இந்த மெஷினின் பெயர் என்கோடர். இந்த நவீன கொள்ளையர்களுக்கு ஒரு என்கெளண்டர் வைத்தால் நல்லது என்று தோன்றுகிறதா?

இது தவிர கீஹோல் கேமராவை ஏ.டி.எம் மையத்தில் அதாவது பின் எண் அழுத்தும் போது படம் பிடிக்கும் வகையில் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் பொறுத்தி விடுவார்களாம். அதன் மூலம் நம் பின் நம்பரைத் தெரிந்து கொள்கிறார்கள். பின்னர் இருக்கவே இருக்கு ஸ்கிம்மர் கொடுத்த தகவல் அடிப்படையில் தயாரித்த போலி கார்டுகள். இதற்கு மேல் என்ன வேண்டும் உங்கள் பணத்தைக் கொள்ளையர்கள் லபக்க

உங்களைப் போல எனக்கும் ஒரே ஒரு கேள்வி? இப்போது எல்லா ஏ.டி.எம் மையங்களிலும் கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இந்தக் கேமராவுக்கு என்னதான் வேலை. இப்பணிகளையெல்லாம் செய்யும் போது அந்தக் கொள்ளையர்களைப் படம் பிடிக்காது இந்தக் கேமரா என்ன செய்து கொண்டிருக்கும். ஒரு வேளை கொள்ளையர்கள் தங்கள் பணியைத் துவங்கும்  முன் கேமராவின் கண்களைக் கருப்புத் துணியால் கட்டி விட்டுத் தொடங்குவார்களோ!! ஒன்னுமே புரியலை.

சரி, இதற்கெல்லாம் காரணமான சிறு(திருட்டு)தொழில் பண்ணை நடத்தும் சீனாவுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

அதைச் சிந்தித்து மண்டையை உடைத்துக் கொள்வதற்கு முன்னர் நம் பணத்தை நாம் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாமே.

நம் மின்னஞ்சலை யார் முன்பாவது திறக்க நேர்ந்தால் என்ன செய்வோம். அவர்களுக்கு நம் குறிச்சொல் தெரிந்திருக்குமோ என்னும் ஐயத்தில் குறிச்சொல்லை மாற்றி விடுவோம் அல்லவா? கடிதங்களைப் பரிமாற்றிக்கொள்ளும் மின்னஞ்சலுக்கே இத்தனை பாதுகாப்புச் செய்யும் நாம்ன் கடினமாக உழைத்து எதிர்காலத்திற்கான முலதனத்தைச் சேமித்து வைத்திருக்கும் நம் சொந்தக் கருவூலத்தை எப்படி பாதுகாக்க வேண்டும். மின்னஞ்சலின் குறிச்சொல்லை அடிக்கடி மாற்றுவது போல ஏ.டி.எம். கார்டின் குறியெண்ணை (பின் நம்பரை) அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்படியே நம்பரை மாற்றிவிட்டாலும் மெஷினில் எண்ணைப் பதிவு செய்யும் போது மெஷின் பக்கமாகச் சற்று குனிந்து நீங்கள் பதிவு செய்யும் எண் எந்தக் கேமராவிலும் பதிவாகதவாறு தலையால் மறைத்துக் கொள்ளுங்கள்.

வேற்று நபர் உள்ளே இருக்கும் போது நீங்கள் ஏ.டி.எம். மைப் பயன் படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

ஏ.டி.எம். மையத்தில் ஏதாவது வழக்கத்திற்கு மாறான பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதா என கண்காணிக்கவும். அப்படி ஏதாவது தென்பட்டால் ஏ.டி.எம். மிஷினில் இருந்து பணம் எடுப்பதைத் தவிர்த்து விடவும்.

         யாராவது மிரட்டி உங்களை பணம் எடுத்து கொடுக்க சொன்னால் உங்கள் பின் கோட் தலைகீழாக டைப் பண்ணுங்கள் .. பணம் கொடுக்கும் ஆனால் உடனடியாக இரண்டாவது முறை உபயோக படுத்த முடியாமல் உங்கள் கணக்கு மூடப்படும்


ஏ,டி.எம். கார்டின் பின்புறம் குறிப்பிட்டுள்ள வங்கியின் எண்ணில் அழைத்து குறிப்பிட்ட வங்கிக்கோ அல்லது காவல் துறைக்கோ அது குறித்த தகவலைக் கொடுப்பது ஒரு சிறந்த சமுதாயச் சேவையும் ஆகும்

நீங்கள் பணம் எடுக்காமல் இருக்கும் போதே உங்கள் பணம் குறைந்து இருந்தால் அல்லது களவாடப் பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்குப் புகார் கொடுக்கலாம். தொலைபேசி எண் 2345 2317. இது சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களின் திருட்டு தொடர்பாகப் புகார் கொடுக்க மட்டும். இது போல பிற பகுதிகளிலும் இயங்கும். போலிஸ் கமிஷனர் அலுவகங்களில் கேட்டு தகவல்களை அறிந்து கொள்வது உங்கள் வளமான, பாதுகாப்பான எதிர்காலத்திற்கு நல்லது.

கொசுறாக ஒரு சுவையான செய்தி. ஏ.டி.எம். கார்டைப் போட்டால் பணத்தை எடுக்கலாம் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் பணத்தைப் போட்டால் தங்கத்தை எடுக்கலாம் என்பது பலர் அறியாதது. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் என்னும் நகரில் வெஸ்டின் பேலஸ் என்ற உணவகம் ஒன்றில் தங்கம் கொடுக்கு ஏ.டி.எம். ஒன்று முதன் முதலில் நிறுப்பட்டது. இதனை நிறுவியவர் தாமஸ் ஜிஸ்லர் என்பவர்.

மேலே கூறிய இயந்திரம் தங்கம் மட்டும் கொடுக்கும். இந்தியாவில் தங்கத்தையும் வைரத்தையும் நகைகளாகவே மாற்றித் தரும் ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்டு விட்டது என்பது கொசுறாகக் கொடுக்கும் செய்தியிலும் பெருமையான செய்தி. மும்பையில் கீதாஞ்சலி நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள இதில் முப்பத்தாறு வகையான ஆபரணங்களைப் பெறலாம். வேவ்வேறு வகையான நகைகளைப் பெற குறைந்த பட்சம் 1000 உரூபாயும் அதிகபட்சமாக 30,000 உரூபாயும் இருந்தால் போதுமானது.

இன்னொரு பயங்கரமான கொசுறு. ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை நுழைத்தவுடன் பணமும் வரவில்லை, தங்கமும் வரவில்லை. அந்த இயந்திரத்தில் இருந்து பாம்பு வந்துள்ளது. சத்தியாமாங்க. இங்க இல்ல. ஸ்பெயின் நாட்டில்.

அப்பப்பா ஏ.டி.எம் பற்றி இன்னும் சுவையான செய்திகள் பல.. ஆனால் பக்கங்கள் போதா.. அதனால் இத்துடன் உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்..



இக்கட்டுரை ஜனவரி மாத சோழநாடு இதழில் வெளியானது.  நன்றி சோழநாடு.